சமீப காலமாக அரசியல் மேடைகளில் சினிமா நடிகைகளின் பெயர்களை பயன்படுத்தி பேசுவது அதிகரித்து வருவது கவலைக்கிடமாக உள்ளது. குறிப்பாக, பெண்கள் குறித்து இழிவான மற்றும் பொருத்தமற்ற கருத்துக்கள் வெளியிடப்படுவது சமூகத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு விஜய் மற்றும் த்ரிஷா குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்து சர்ச்சையாக மாறியது. அதனைத் தொடர்ந்து, தற்போது அதிமுக எம்பி சி.வி. சண்முகம் ஒரு கூட்டத்தில் பேசியபோது, “எனக்கு நயன்தாரா வேண்டும், சிஎம் கொடுப்பாரா?” என்று கூறியிருப்பது பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து நடிகை குஷ்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “பெண்கள், குறிப்பாக நடிகைகள், யாருடைய சொத்தும் அல்ல. அவர்கள் பேசப்படும் பொருளாகவோ அல்லது தேவையானபோது இழுத்து வரப்படும் விஷயமாகவோ இருக்க முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஒரு பெண்ணின் அடையாளத்தை பயன்படுத்தி மற்றவர்களை கேலி செய்வது அல்லது கருத்தை நிரூபிக்க முயல்வது, அந்த நபரின் மனநிலையையும் வளர்ப்பையும் மட்டுமே காட்டுகிறது” என்றும் அவர் வலியுறுத்தினார்.
பெண் நடிகர்களின் பெயர்களை மலிவான நகைச்சுவை மற்றும் அவமானகரமான கருத்துகளுக்காக பயன்படுத்துவது முற்றிலும் தவறு என்றும், இது சமூகத்தில் தவறான முன்னுதாரணமாக மாறக்கூடும் என்றும் குஷ்பு எச்சரித்துள்ளார்.
இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.



