கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியில் இன்று மாலை அதிர்ச்சியூட்டும் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தை தனியார் கல்லூரி பேருந்து ஒன்று கடந்து செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக அந்த பேருந்து தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
அந்த சமயத்தில் புலியூரில் உள்ள சிமெண்ட் ஆலையிலிருந்து ஜல்லி ஏற்றி வந்த சரக்கு ரயில் அதே தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. இதனை கவனித்த மாணவர்கள் அச்சமடைந்து பேருந்திலிருந்து விரைந்து இறங்க முயன்றனர்.
ஆனால் அதற்குள் சரக்கு ரயில் வேகமாக வந்து பேருந்தின் மீது மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 20 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



